திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.53 திருவானைக்கா - திருவிராகம்
பண் - கௌசிகம்
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே.
1
சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.
2
தாரமாய மாதராள் தானோர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.
3
விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.
4
வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.
5
நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொள்மிடறன் அல்லனே.
6
கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.
7
பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே.
8
ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்
றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.
9
கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினார் தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.
10
ஊரியழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும்
ஆரியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும், திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம்
பண் - பழம்பஞ்சுரம்
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
1
வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தன்ஆ ரூராதி யானைக்காவே.
2
மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.
3
கருடனை யேறரி அயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
4
மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.
5
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருங்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் யானைக்காவே.
6
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
7
கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.
8
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
9
அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
10
ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com